யாழ்.மாநகர மேயர் மணிவண்ணனின் கைது அழிவிற்கான ஆரம்பம் - மயூரன்
யாழ்.மாநகர மேயர் கைது செய்யப்பட்டமையானது அரசாங்கத்தின் கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தி நிற்பதுடன், அவர்களது அழிவிற்கான ஆரம்பம் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்.மாநகர மேயர் கைது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்.நகரத்திற்கான காவல்படை ஒன்று உருவாக்கப்பட்ட காரணத்தை அடிப்படையாக வைத்து யாழ்ப்பாண முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு கடுமையாண கண்டணங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த செயற்பாடு அரசின் கையாலாகாத, கீழ்த்தரமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி நிற்கின்றது.இப்படியான கைதுகள் மூலம் தெற்கில் சரிந்துபோயுள்ள தமது செல்வாக்கை உயர்த்தலாம் என்ற கபட நோக்கத்தில் இவை அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் பெயரினை பயன்படுத்தி தமது அரசியல் இருப்புக்களை பாதுகாத்து வந்த சிங்கள அரசியல்வாதிகள் தற்போது அவர்கள் இல்லாத நிலையில் புலிகளின் சீருடையை காட்டி, இது தான் பூச்சாண்டி என்று சிங்கள மக்களை திருப்திப்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி்த் தேர்தலில் சக்ரானின் தாக்குதலை பிரச்சாரப்படுத்தி, இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டு தேர்தலில் வெற்றி பெற்றனர். தற்போது எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிற்கு எந்த விடயங்களும் இல்லாத நிலையில் இப்படியான அற்பசொற்ப செயல்களை பெரிதுபடுத்தி அரசியல் நாடகத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.
உள்ளூராட்சி சபைகளிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமே முதல்வர் அந்த செயற்பாட்டை முன்னெடுத்திருந்தார். அவரது கைதின் மூலம் இருக்கின்ற சொற்ப அதிகாரத்தினை கூட தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கும் வெட்க்கக்கேடான மிலேச்சத்தனமான செயற்பாட்டை பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இது அவர்களது அழிவிற்கே வித்திடும்.எனவே மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவரது முறையற்ற கைதுக்கு கட்சி பேதங்களை கடந்து, அனைத்து தரப்புகளும் ஒற்றிணைந்து அழுத்தங்களை,முன்னெடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.