யாழ். காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறைமுகமாக்க முடியாது - யாழில் அமைச்சர் பிமல் தெரிவிப்பு!
யாழ். காங்கேசன் துறைமுகத்தை வணிகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம், இந்தியா ஒதுக்கிய பணமும் அதற்கு போதாது என நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போக்குவரத்து துறைமுகங்கள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் துறைமுக அபிவிருத்தி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.
குறித்த கலந்துரையாடலில் காங்கேசன் துறைமுகத்தின் அபிவிருத்திகள் துரிதப்படுத்தப்படுவதோடு யாழ். பலாலி விமான நிலைய பாதுகாப்புக்காக சுபிகரித்து வைத்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் துறைசார் அமைச்சர் பிமல் ரட்நாயக்கவிடம் கோரிக்கை முன்வைத்தார்.
இந்திய நிதி
இதன்போது பதில் அளித்த அமைச்சர், "யாழ். காங்கேசன் துறைமுகத்தை வணிகத்துறை மூலமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம். ஏனெனில் வணிகத்துறை முகமாக அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான காரணிகள் ஏதுவாக இல்லாத நிலையில் அம்பாந்தோட்டை மற்றும் ஒலிவில் துறைமுகங்கள் போன்று காங்கேசன் துறைமுகத்தை மாற்ற எமது அரசாங்கம் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா வழங்கிய நிதி போதாது என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இந்தியாவிடம் வேண்டுமானால் நாங்கள் பேசி மேலதிக நிதியை பெற்று தருகிறோம் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள் என கூறினார்.
பதில் வழங்கிய அமைச்சர், இந்தியாவிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் பேசி உள்ளார் நாங்களும் பேசியுள்ளோம் ஆனால் வணிகத் துறைமுகமாக அதை மாற்றுவதற்கு முடியாது என தெரிவித்தார்.
இதன்போது கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நீங்கள் எவ்வாறு ஆய்வு செய்யாமல் பொருத்தமில்லை என கூற முடியும் என்றார். பதில் வழங்கிய அமைச்சர், ஆய்வறிக்கை இருக்கிறது. நாடாளுமன்றத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் என பதில் வழங்கினார்.
யாழ்ப்பாண விமான நிலைய பாதுகாப்புக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை எப்போது விடுவிப்பீர்கள். ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு ஏன் நட்ட வீடு வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
பதில் வழங்கிய அமைச்சர் மக்களின் காணிகள் மக்களுக்கு என்பது எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு யாழ்பாண விமான நிலைய பாதுகாப்புக்காக கைப்பற்றிய காணி விடுவிப்பு தொடர்பில் தற்போது கூற முடியாது. பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியே பதில் வழங்க முடியும் என்றார்.



