யாழ். அல்வாயில் ஒருவருக்கு கொரோனா - அதிபர், 4 ஆசிரியர்கள் உட்பட 32 மாணவர்கள் தனிமைப்படுத்தல்
அல்வாயைச் சேர்ந்த ஒருவருக்கு மூதூரில் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் டிசம்பர் 19ஆம் திகதியில் இருந்து நேற்றுமுன்தினம் 6ஆம் திகதிவரை பருத்தித்துறை அல்வாயிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இவர் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பணி நிமிர்த்தம் நேற்று மூதூர் சென்றபோது அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் கொரோனா சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது குடும்பத்தினர் அல்வாயில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவரது இரு பிள்ளைகளும் பருத்தித்துறையிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட வகுப்புக்களில் கடந்த 5ஆம் திகதிவரை கலந்துகொண்டுள்ளனர்.
அந்தப் பாடசாலையின் நான்கு ஆசிரியர்களும் 32 மாணவர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றாளருடன் தொடர்பைப் பேணியோரை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேவேளை, பாடசாலையின் அதிபர், கடந்த வாரம் இனங்காணப்பட்ட புலோலி தொற்றாளர் சென்றுவந்த தொலைத் தொடர்பு நிலையத்துக்குச் சென்றுவந்ததை அடுத்து ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.