யாழ்.நகரில் விற்பனை செய்யப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி!உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
யாழ்.நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் யாழ். மாநகர சுகாதாரபிரிவினரால் குறித்த சைவ உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இன்று காலை உழுந்து வடை ஒன்றினை வாங்கி வீடு சென்று வடையை சாப்பிட்ட போது வடைக்குள் கரப்பான் பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக குறித்த நபர் யாழ். நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகரசபையின் சுகாதார பரிசோதர்கள் உடனடியாக குறித்த கடைக்கு விஜயம் மேற்கொண்டு கடையினை பரிசோதித்ததோடு கடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்றைய தினமும் மாநகர சுகாதார வைத்திய அதிகாரியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கடையினை பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது பல சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டதுடன் குறித்த கடையிற்கு வடை தயாரித்து வழங்கும் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சமையற்கூடமும் பரிசோதனை செய்யப்பட்டது.
குறித்த சமையற்கூடமும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்குவது பொது சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இன்றைய தினம் யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ். நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனினால் கடை உரிமையாளரிற்கு எதிராகவும், சமையற்கூட உரிமையாளரிற்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இரு வழக்குகளையும் விசாரித்த நீதவான் குறித்த கடையினையும், சமையற்கூடத்தினையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக உடன் சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டதுடன், இரு சந்தேகநபர்களையும் தலா ஒரு இலட்சம் ஆட்பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 25ம் திகதிக்கு நீதிமன்றால் ஒத்தி
வைக்கப்பட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த கடையும்,
சமையற்கூடமும் சீல் வைத்து மூடப்பட்டது.