யாழ்.போதனாவில் சிகிச்சைக்கு வந்தவர் அட்டகாசம்: பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் கத்திக்குத்து
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போதையில் சிகிச்சை பெற வந்தவர் , பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் (14) அதிகாலை 1.40 மணியளவில் போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு 24ஆம் இலக்க விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு உத்தியோகஸ்தருக்கும் கத்திக்குத்து
இதன்போது, தாதிய உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முரண்பட்டு , தகாத வார்த்தைகளை பேசி , விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டுள்ளார்.

இது தொடர்பில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து , அவர்கள் விடுதிக்கு விரைந்து குறித்த நபரை கட்டுப்படுத்த முயன்ற போது , தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அச்சுறுத்தியுள்ளார்.
இதன்போது அவரை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கிபிடிக்க முற்பட்ட வேளை ஒரு உத்தியோகத்தருக்கு கைகளில் காயத்தினை ஏற்படுத்தி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.