வட மாகாண ஆளுநர் செயலகம் முன் குழப்ப நிலை
வடக்கு மாகாண ஆளுநருடன் மாதகல் காணி உரிமையாளர்கள் சந்திப்பதற்கு இன்று ஏற்பாடுகள் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் ஆளுநர் அலுவலகம் முன்பு குழப்பமான நிலை ஏற்பட்டது.
வட மாகாண ஆளுநர், காணி உரிமையாளர்களை இன்று மதியம் 2 மணிக்கு சந்திக்கவிருப்பதாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலகத்தால் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் நாளை காலை 8 மணிக்கு அந்த சந்திப்பு நடைபெறும் எனவும் ஒரு சில காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேரடியாக சென்று காணி உரிமையாளர்கள் கேட்ட பொழுது இந்த சந்திப்பு தொடர்பில் நமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது தொடர்பாகவோ, நாளை இந்த சந்திப்பு இடம் பெறுவது தொடர்பாகவோ எமக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆளுநரை சந்திக்க வெளி மாவட்டங்கள் தூர இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக அங்கிருந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாதகலில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் 1.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |