நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரத்தை முன்னிட்டு போராட்டம் (video)
இலங்கை முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளடங்கலாக தொழில் வல்லுனர்களின் ஒன்றிணைந்த கூட்டணியினரால் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசைலையிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுஷ்டிப்பு இன்று (26.01.2023) இடம்பெற்றுள்ளது.
நீதியற்ற, தன்னிச்சையான முறையில் மக்களிடமிருந்து கொள்ளையிடப்படும் வரிப்பணத்திற்கெதிராகவும், அரச வைத்தியசாலைகளில் நிலவுகின்ற மருந்து பொருட்களுக்கான, மருத்துவ உபகரணங்களிற்கான தட்டுபாடுகளுக்கு எராகவும் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசைலையில் நோயாளர்களிடமும், பொதுமக்களிடமும் கையெழுத்துக்கள் பெறப்பட்டு இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினை உடனடியாக நீக்ககோரி அதிகாரிகளை வற்புறுத்தும் கையெழுத்து போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக் கையெழுத்து போராட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.
அநீதியான அரசின் தன்னிச்சையான மக்களுக்கு பாதகமான வரிக்கொள்கையினை கண்டிப்போம் என்ற தொனிப்பொருளில் கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை கறுப்பு வாரமாக அறிவிக்கப்பட்டு வைத்திசாலையின் வைத்தியர்கள் கைகளில் கறுத்த துண்டுகளை கட்டிக்கொண்டு தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினை மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் மாவட்ட மருத்துவமனைகளுக்கு பொது சேவையினை பெறவந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி மருந்துக்கான தட்டுப்பாட்டினை எடுத்து கூறியுள்ளதுடன் மக்களிடம் இருந்து கையெழுத்து பெறும் நடவடிக்கையிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.
மக்களின் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள கோரிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு ஆனது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிலவும் மருந்து தட்டுப்பாடு, அதிகரித்துவரும் மற்றும் சமாளிக்க முடியாத மருந்துபொருட்களுக்கான விலையேற்றம் மருந்து கொள்வனவில் இடம்பெற்று வருவதாக கூறப்படும் ஒழுக்கற்ற மற்றும் தவறான பொறிமுறைகளை உடன் நீக்கி மருந்து தட்டுப்பாடு இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை
பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் இன்றையதினம் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் போராட்டம் இடம்பெற்றது.
இலங்கை முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளடங்கலாக தொழில் வல்லுனர்களின் ஒன்றிணைந்த கூட்டணியினரால் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
நீதியற்ற, தன்னிச்சையான முறையில் மக்களிடமிருந்து கொள்ளையிடப்படும் வரிப்பணத்திற்கெதிராகவும், அரச வைத்தியசாலைகளில் நிலவுகின்ற மருந்து பொருட்களுக்கான, மருத்துவ உபகரணங்களிற்கான தட்டுபாடுகளுக்கு எதிராகவும் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசைலையில் நோயாளர்களிடமும், பொதுமக்களிடமும் கையெழுத்துக்கள் பெறப்பட்டது. கையெழுத்து சேகரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை
அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளத்திற்கான வரி விதிப்பு சம்மந்தமாக தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று(26) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக நடாத்தியது.
"அநீதியான அரசின் தன்னிச்சையான மக்களுக்கு பாதகமான வரிக்கொள்கையை கண்டிப்போம்" எனும் தொனிப்பொருளில் பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இக் கண்ட ஆரப்பட்டத்தினை மேற்கொண்டனர்.
அதிகரித்த வரிகளை வசூலிப்பதன் மூலம் பொதுத்துறையில் பணியாற்றும் தொழில்வாண்மைமிக்கோருக்கான ஊதியத்தினை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவ்வாறு வரிகள் விதிக்கப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகத்தான் என்ற போலியான பிரச்சாரத்தினையும் முன்னெடுத்து வருகின்றது.
ஆனால் எமது வரிகள் மூலம் திரட்டப்படும் பணம் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் நோக்கத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தப்படபோவதில்லை. இந்த வரி அதிகரிப்பு நியாயமற்றது என்பது மட்டுமல்ல. இதனால் எமது தேசம் அதன் சாத்தியமான முழு வளத்தினையும் இழக்கும் அபாயம் உள்ளது. என்ன விலையினைக் கொடுத்தாவது இம்மோசமான பேரிடர் நிலையினை முற்றுமுழுதாக தடுக்கவேண்டும். எமது நாட்டில் இன்று நிலவுகின்ற பொறுப்பற்ற, அநீதியான நிலை குடிமக்களை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளியுள்ளதனையும் இங்கு நாம் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது என்ற விடயத்தை மையப்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பட்டத்தினை மேற்கொண்டனர்.
திணிக்காதே திணிக்காதே வரியினை திணிக்காதே!,வெளியேற்றாதே வெளியேற்றாதே மூளைசாலிகளை வெளியேற்றாதே!, அடிக்காதே அடிக்காதே மக்களின் வயிற்றில் அடிக்காதே! எனும் பல சுலோகங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனத்தை மேற்கொண்டனர்.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், இலங்கை மின்சார சபை ஊழியர்கள், சங்கம் வைத்தியர்களின் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு
அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 23 முதல் 27 வரை கறுப்பு வாரம் எனும் தொனிப் பொருளில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச பல்வைத்திய சங்கம், இணைந்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று வியாழக்கிழமை (26) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தல் நிறைவேற்றபட்ட வரிக் கொள்கையை எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச பல்வைத்திய சங்கம், இணைந்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து காந்திபூங்காவிற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் ஒன்று திரண்டனர்.
இதில் வானுயரும் வரிச்சுமை நாட்டை விட்டகலும் தொழில் வல்லுனர்கள், நண்பர்களுக்கு வரிச்சலுகை தொழில் வல்லுனர்களுக்கு வரிச்சுமை, வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கவும். போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் சுமார் ஒருமணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஆர்பாட்டகாராக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புத்தளம்
புத்தளம் பிரதேசத்திலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற அனைத்து வங்கிகளின் ஊழியர்களும் ஒன்றினைந்து வீதிக்கு இரங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகல் 12.30 மணியிலிருந்து 1.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.
பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை ஏந்தியவாறும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேலாக சம்பளம் பெறும் வங்கி ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள வரிவிலக்கின் படி இம்முறை சம்பளத்தில் 100%6 100 100 வீதம் வரை அரவிடப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் விசனம் தெரிவித்தனர்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் பொருளாதார தட்டுப்பாடு மருந்துகள் தட்டுப்பாடு குறித்தும் தாம் பாதிப்படைந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த அரசாங்கம் தமக்கு விதிக்கப்பட்டுள்ள வரிக் கொள்கையை உடனடியாக நீக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அனைத்து தொழிற்சஙகள்களும் ஒன்றினைந்து நாட்டை முடக்கி பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக வங்கி ஊழியர்கள் இதன்போது தெரிவித்தனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் கறுப்பு பட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி, மல்லாவி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது, பொது மக்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டதுடன், குறித்த மகஜர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை மருந்து பற்றாக்குறை தொடர்பில் மக்கள் கவலை வெளியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா
நியாமற்ற வரிச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இன்று வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள கார்கில்ஷ் புட்சிட்டிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னேடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வங்கி ஊழியர்கள் நண்பர்களுக்கு வரிச்சலுகை தொழில் வல்லுநர்களுக்கு வரிச்சுமை, வானுயரும் பணவீக்கம் தொழில் வல்லுநர்கள் நடு வீதிக்கு போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திவாறும் தொழில் வல்லுநர்களை சுரண்டித் திண்ணும் வரி யோசனையை மீளப்பெறு, அரசியல்வாதி களவெடுத்த காசை எடுத்து நாட்டை திருத்து, வங்கி திருடன்கள் பெரும் பதவிகளில், நியாயமான வரி வேண்டும் மக்களுக்கு சலுகை வேண்டும், எல்லா புறமும் ஊழல் மோசடி இன்னும் அவர்கள் மாடங்களில் போன்ற பல கோசகங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டம் 30 நிமிடங்களில் நிறைவுற்றிருந்தமையுடன் வவுனியாவிலுள்ள பெருன்பான்மையான வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.