நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட யோஷிதவுக்கு பிணை..
புதிய இணைப்பு
இலஞ்ச ஆணையால் கைது செய்யப்பட்ட யோஷிதா ராஜபக்சவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.
அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபா மதிப்புள்ள மூன்று பிணைகளின் கீழ் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன், வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மூன்றாம் இணைப்பு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்த விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டரீதியான காரணங்களினால் அவரால் முன்னிலையாக முடியாது என ஆணைக்குழுவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடற்படை பதவிக்காலத்தில் பல்வேறு முறைப்பாடுகள்
கடந்த 2006ம் ஆண்டு யோஷித ராஜபக்ச, கடற்படையில் (Sri Lanka Navy) சேருவதற்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பூர்த்தி செய்யாத நிலையில், கடற்படையின் விதிமுறைகளை தளர்த்தி இரண்டாம் லெப்டிணன்ட் பதவிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தது.

இதனையடுத்து 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், அப்போதைய இலங்கை கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட யோஷித ராஜபக்சவை பிரித்தானிய கடற்படை பயிற்சிக்கல்லூரியில் இணைப்பது குறித்து கடிதமொன்றினை அனுப்பியிருந்த நிலையில், அதே ஆண்டு நவம்பர் மாதம் கோரிக்கையை ஏற்க முடியும் என்று பயிற்சிக்கல்லூரி பதிலளித்திருந்தது.
அத்துடன் கடற்படையில் போதிய அனுபவமோ, எந்தவொரு விசேட திறமையோ வெளிக்காட்டாத நிலையில் குறுகிய காலத்துக்குள்ளாகவே அவர் பிரித்தானிய ரோயல் கடற்படையின் விசேட பயிற்சிநெறியொன்றுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
அத்துடன் கடற்படையில் பணியாற்றிய காலங்களில் அவருக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
தகுதியில்லாமல் அரச செவில் பயிற்சி
உரிய தகுதியில்லாமல் உள்வாங்கப்பட்ட இவர், அரசாங்கத்தின் சுமார் ரூ. 22.2 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி பிரிட்டன் (Britannia Royal Naval College) மற்றும் உக்ரைனில் பயிற்சிகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகியருந்தன.

மேற்கண்ட விடயங்கள் குறித்து இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.
அதனடிப்படையில் இது தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்க நேரில் வருகை தருமாறு யோஷித ராஜபக்சவுக்கு இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இதற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு
யோஷித ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
விசாரணை ஒன்றில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கமைய, அவர் இன்று காலை (17) முன்னிலையாகியுள்ளார்.
சட்டரீதியான காரணங்கள்
நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டரீதியான காரணங்களினால் அவரால் முன்னிலையாக முடியாது என ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்த நிலையிலேயே இன்று முன்னிலையாகியுள்ளார்.
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam