ஆயுத யுத்தம் முடிவுற்ற பின் கலை இலக்கியங்கள் மௌனித்துள்ளது! பொ. ஐங்கரநேசன் ஆதங்கம்
போராட்டக் காலத்தில் மக்களை எழுச்சி கொள்ள வைத்த கலை, இலக்கியங்கள் இப்போது ஊமையாக இருப்பது வருத்தமளிக்கிறது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும், 'வேர்முகங்கள்' நூலின் ஆசிரியருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வேர்முகங்கள்' நூலின் அறிமுகவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.10.2025) முள்ளியவளை பரி-மத்தியா ஆலய மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர, தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
போராட்டங்கள்
போராட்டம் முளை கொண்டதற்கான காரணங்கள் இப்போதும் அப்படியே நீடிக்கும்போது, போராட்டம் முடிவுக்கு வர இயலாது. அது சாத்தியமான வழிகளில் எல்லாம் ஜனநாயகப் போராட்டமாகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, இப்போராட்டங்கள் இன்று அரசியல் வாதிகளுக்குரிய ஒரு பணி என்பதாக மாத்திரமே சுருங்கிப் போயுள்ளது.
ஆயுதப் போராட்டத்தின் முடிவுடன் தமது பேனாக்களை மூடி வைத்துள்ள கலை, இலக்கியவாதிகள் ஜனநாயகப் போராட்டக்காலத்திலும் தமது பணிகளைத் தொய்வின்றித் தொடரவேண்டும்.
போராட்டக்காலத்தில் பேசாமடந்தைகளாக இருந்த பலர் இப்போது தமிழ்த்தேசிய வாதத்தைக் கேள்விக்குள்ளாக்கத் தலைப்பட்டுள்ளனர்.
தமிழ்த்தேசிய உணர்வு
இலங்கையில் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கம் அமைந்துள்ள நிலையில் அவர்கள் உயிர்பெற்றுள்ளனர்.
போருக்குப் பின்னரான எமது இளைய தலைமுறையைத் தமிழ்த்தேசிய உணர்வில் இருந்தும் மடைமாற்றி, பெருந்தேசிய வாதத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சிநிரலை தெரிந்தோ தெரியாமலோ முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், எமது போராட்டத்தின் நியாயங்களை, போரில் பெற்ற வெற்றிகளை, பட்ட வதைகளை எமது இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுவது வரலாற்றுக் கடமையாகும்.அதை எமது கலைஞர்களும் இலக்கியவாதிகளும் செய்ய முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








