சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் வடக்கில் 4 மாவட்டங்களிலும் இடம்பெறுகின்ற அத்துமீறும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் இன்று (26.07.2025) கலந்துரையாடப்பட்டுள்ளது.
கௌரவிப்பு
இதன்போது வடமாகாண இணையத்தின் ஊடக பேச்சாளர் அ.அன்னராசா, முல்லைத்தீவு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் ஆகிய இருவரும் சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்த ஆக்கமும், ஊக்கமுமாக இருந்தமையால் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தினால் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள்.
குறித்த கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர், ஆளுநர், வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4 மாவட்டங்களை சேர்ந்த நீர்வளத்திணைக்கள உத்தியோகத்தர்களை இணைத்து வட்டமேசை மாநாடு ஒன்றினை நடத்த இதன் போது முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
கலந்து கொண்டவர்கள்
குறித்த கலந்துரையாடலில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும், உலக மீனவ சம்மேளனத்தின் பொது செயலாளருமான ஹேர்மன்குமார, வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்சிஸ், மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணையத்தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்தவப்படுத்திய உறுப்பினர்கள், பிரதிநிதிகள் எனபலரும் கலந்து கொண்டிருந்தனர்.



















