வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழிலாளர்களைச் நேரில் சந்தித்து கலந்துரையாடுமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, விரைவில் முல்லைத்தீவிற்கு வருகைதந்து கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறியவுள்ளதாகப் பதிலளித்துள்ளார் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சிக்கும், ஜனாதிபதிக்குமிடையில் 19.11.2025 ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர், கட்சியின் எட்டுப் நாடாளுமன்ற உறுப்பிர்கள் உள்ளிடங்கலான குழுவினருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
முக்கிய சந்திப்பு
அதற்கமைய தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, மாகாணசபைத் தர்தல், வடகிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள், துயிலுமில்லங்களை விடுவிப்புச்செய்தல், வட,கிழக்கில் அதிகரித்துள்ள படையினரின் பிரசன்னம், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள்அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம், வடக்கு, கிழக்கிலுள்ள கடற்றொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசியிருந்தோம்.

அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் மிகமோசமாக கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதேவேளை வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடற்றொழிலுடன் தொடர்புடைய மாவட்டங்களாகக் காணப்படுகின்ன.
இந்நிலையில் அங்கு அதிகளவில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதையும் அதனால் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தேன். அதேவேளை வடமாகாண கடற்றொழிலாளர் இணையம்நாடாளுமன்றிற்கு வருகைதந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து இந்த சட்டவிரோத கடற்றொழிலால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்திப்பது தொடர்பால் கோரிக்கை விடுத்த விடயத்தினையும் இதன்போது ஜனதிபதியிடம் தெரியப்படுத்தினேன்.
சட்டவிரோத செயற்பாடுகள்
அத்தோடு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம், சம்மேளனம், கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினரால் கடிதங்கள் மூலம் என்னிடம் கோரிக்கை விடுத்ததையும், அந்தக் கோரிக்கைக் கடிதங்களுடன் ஏற்கனவே என்னால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பிலும் நினைவுபடுத்தினேன்.

இவ்வாறாக வடக்குமாகாண கடற்றொழிலாளர்களர்கள் ஜனாதிபதியைச் சந்திக்க விரும்புகின்றனர் என்ற தகவலையும் தெரியப்படுத்தினேன். எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மீனவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக அவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அக்குறைகளைத் தீர்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தேன். எமது கட்சியினரும் இதுதொடர்பில் பேசியிருந்தார்கள்.
இந்நிலையில் கூடியவிரையில் தாம் முல்லைத்தீவிற்கு வருகைதந்து அந்த மீனவர்களுடன் நேரடியாக பேசுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார்.
இதுதவிர வன இலாகா, வனஜீவராசிகள் ஆகிய திணைக்களங்கள் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு ஆக்கிரமித்த இடங்களைப்பற்றியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட படையினரது முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன் - என்றார்.