புலிபாய்ந்தகல்லில் பெரும்பான்மை இனத்தவர் அத்து மீறி வாடி அமைத்த விவகாரம்:சந்தேகநபருக்கு சட்டநடவடிக்கை
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய், புலிபாய்ந்த கல் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு கோரி கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் அறிவித்தல் பதாகையொன்றை குறித்த பகுதியில் காட்சிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு அப்பகுதியில் அத்துமீறி வாடி அமைத்த சந்தேகநபராக இனங்காணப்பட்ட W.L.நிசாந்த என்னும் பெரும்பான்மை இனத்தவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ் கடற்றொழிலாளர்கள் பன்நெடுங்காலமாக கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்தகல் பகுதியை ஆக்கிரமித்து அங்கு வாடி அமைப்பதற்கு பெரும்பான்மையின கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து முனைப்பு காட்டிவருகின்றனர்.
அத்து மீறி வாடி அமைப்பு
இந்தநிலையில் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் இணைந்து குறித்த அத்துமீறல் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இத்தகைய சூழலில் மீளவும், கடந்த ( 02.04.2025) அன்று குறித்த புலிபாய்ந்தகல் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த சில பெரும்பான்மையின கடற்றொழிலாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடமோ, கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிப் பிரிவிடமோ எவ்வித அனுமதிகளையும் பெறாது அத்துமீறி வாடிகளை அமைத்திருந்தனர்.
இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக புலிபாய்ந்த கல் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வாடியை அகற்ற அப்பகுதியில் அறிவித்தல்களை காட்சிப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.
சட்டநடவடிக்கை
இதனையடுத்து, குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலவாடிகள் முழுமையாகவும், சிலவாடிகள் பகுதியளவிலும் அகற்றப்பட்டுக் காணப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் குறித்த பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை முழுமையாக அகற்றுமாறு அறிவித்தல்களும் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டன.
குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, " கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமஅலுவலர் பிரிவில் அமைந்துள்ள புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் காணப்படும் இக்காணியானது அரச காணியாகக் காணப்படுவதால் இப்பிரதேசத்தில் எமது அனுமதியின்றி வாடிகள் அமைத்தல் மற்றும் எவ்விதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளவேண்டாம் என்பதனை தெரிவித்துக்கொள்வதுடன் மீறி வாடிகள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் தங்கள்மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தங்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
