துணைத்தொற்றுக்கள் தொடர்ந்தும் பரவி வருவதன் காரணமாக தனிமைப்படுத்தலை விலக்கிக்கொள்ள முடியவில்லை:அஜித் ரோஹண
கொழும்பின் சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த இடங்களில் கொரோனா துணைத்தொற்றுக்கள் தொடர்ந்தும் பரவி வருவதன் காரணமாக சுகாதார அதிகாரிகளால் தனிமைப்படுத்தலை விலக்கிக்கொள்ள முடியவில்லை.
இந்த பிரதேசங்களில் இருந்து தொடர்ந்தும் கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்படுகின்றனர்.எனவே தனிமைப்படுத்தலில் உள்ள பொதுமக்கள் ஒரு வாரத்துக்காவது உறுதியான முறையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் .
கொழும்பின் கிராண்ட்பாஸ், ஆட்டுபட்டித்தெரு, தெமட்டகொட, கொட்டாஞ்சேனை மற்றும் அவிசாவளை காவல்துறை பிரிவுகளிலும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்லையிலும்,மட்டக்களப்பில் காத்தான்குடியிலும் நாட்டின் ஏனைய சில இடங்களிலும் தற்போது தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி முகக்கவசங்களை அணியாத குற்றத்துக்காக 23பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இதுவரையான காலப்பகுதியில் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 98 ஆக உயர்ந்துள்ளது.