உடன் அமுலாகும் வகையில் நாட்டில் பல பகுதிகள் முடக்கம்!
மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலேவெல மற்றும் நாவுல பொலிஸ் பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்துடன், குருணாகல் மாவட்டத்தில் பன்னல பொலிஸ் பிரிவு மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் என்பன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவின் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 104 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் 1,531 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், ஆறு கோவிட் மரணங்களும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.