ஜனநாயகம் சாகடிக்கப்பட்டதால் இராஜாங்க அமைச்சர் பதவி இழப்புக்கான நிலை உருவானது! சிறிதரன் எம்.பி
ஜனநாயகம் சாகடிக்கப்பட்டதால் தான் இராஜாங்க அமைச்சர் பதவி இழப்புக்கான நிலை உருவானது என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இன்று ஊடகவியலாளர் கி.வசந்தரூபன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இளைஞர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஜனநாயகம் இருக்கின்றதா என்ற கேள்வி ஒரு தமிழ் தரப்பாக இருந்து பார்கின்ற போது எங்களை கேள்வி கேட்ட வைக்கும். இலங்கை ஜனநாயக நாடு. தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். பல்வேறு வகையான தேர்தல் முறைகள் இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டு தான் இந்த நாடு ஜனநாயக நாடு என்கின்றோம்.
ஆனால், தனியே ஒரு தேர்தலை நடத்தி ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றது என்று சொல்வது சரியல்ல. இந்த நாட்டில் ஏனைய மொழி பேசும் மக்களையும் அரவணைத்து எவ்வாறு கொண்டு செல்கிறார்கள்.
அடுத்தவனுக்குரிய உரிமையை எவ்வாறு இந்த நாடு பகிர்ந்துக்கொள்கிறது. அந்த அடிப்படையில் தான் இந்த நாட்டின் ஜனநாயகம் தங்கியுள்ளது. அத்துடன், எல்லோருடைய அழுத்தங்கள் மற்றும் வற்புறுத்தல்களுக்கு மத்தியில் அமைச்சர் பதவி விலகி இருக்கிறார்.
சர்வதேச ரீதியில் அவர்களுக்கு கிடைத்த அவமானங்களின் அடிப்படையில் அவர் தனது பதவிளை இராஜினாமா செய்துள்ளார். இங்கு கூட ஜனநாயகம் சாகடிக்கப்பட்டதால் தான் இராஜாங்க அமைச்சருக்கு பதவி இழப்புக்கான நிலை உருவானது.
சிறையில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலிட வைத்து துப்பாக்கி முனையில் கொல்லுவேன் என முனைந்த அந்த வெறி பிடித்த, ஜனநாயக வாதிகள் என தம்மை சொல்பவர்கள் இன்று ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துள்ளார்கள். இது கண்ணுக்கு முன்னால் பார்க்கும் ஜனநாயகம். இதைவிட இந்த நாட்டில் பல்வேறுபட்ட ஜனநாயக மீறல்களும், ஜனநாயகத்தை மதிக்காத தன்மைகளும் இப்போதும் தொடர்கிறது.
எல்.எல்.ஆர்.சி அறிக்கை, பரணகம அறிக்கை வந்தாலென்ன, இந்த அரசாங்கம் தாமே விசாரிப்பது என்று சொன்னால் என்ன? எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஜனநாயகம் என்ற பெயரில் ஒரு சர்வாதிகாரத்தையும், இராணுவத்தை கொண்டு செல்லும் ஒரு நாடாகவும் இலங்கை இருக்கிறது. இதுவே இங்குள்ள ஜனநாயகம் என தெரிவித்துள்ளார்.