யாழ் மின்சாரசபையின் பொறுப்பற்ற செயல் - அதிருப்தியில் மக்கள்
வடமாகாண மின்சார சபை கொடுப்பனவு அலுவலகத்திற்குப் பட்டியல் கொடுப்பனவுகளைச் செலுத்தச் சென்ற மக்கள் உத்தியோகத்தர்களின் செயற்பாட்டால் விசனத்துக்குள்ளாகியுள்ளனர்.
இன்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மிகநீண்டகாலமாக விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நேற்றைய தினம் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்கள் பலரும் தம்மிடம் காணப்பட்ட மாதாந்த மின்பட்டியல் கொடுப்பனவு, மின்துண்டிப்பு படிவங்களைக் கொண்டு யாழ் பிரதேச செயலகத்திற்கு அண்மையில் உள்ள வடமாகாண மின்சார சபை கொடுப்பனவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது அங்கு பட்டியல் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியாது, அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் செலுத்துமாறும் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்த மின்சாரசபை வாடிக்கையாளர் விசனத்துடன் சென்றுள்ளனர். இந்நிலையில் மின்சார கொடுப்பனவு பீடத்திற்குப் பொறுப்பான பொறியியலாளரை ஊடகங்கள் தொடர்பு கொண்டபோது பணமூலம் செலுத்தலாம் எனக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து , ஊடகவியலாளர் திரும்பிச்சென்ற பொதுமக்களிடம் நடந்தவற்றைச் செய்தியாகச் சேகரிக்க முற்பட்ட வேளை கொடுப்பனவைப் பணமூலமாகச் செலுத்தலாம் என பாதுகாப்பு உத்தியோகத்தரால் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர் பெருமளவான வாடிக்கையாளர் சமூக இடைவெளியுடன் காத்திருந்து கொடுப்பனவைச் செலுத்திச் சென்றுள்ளனர்.