ஈரானால் மீண்டும் அச்சுறுத்தல்: மத்தியகிழக்கில் மறுபடியும் பதற்றம் அதிகரிக்குமா..!
ஈரான் மீண்டும் யுரேனியத்தை செறிவூட்டத் தொடங்கும் திறனைக் கொண்டுள்ள நிலையில், அந்நாடு சில மாதங்களில் அணுகுண்டை உருவாக்க சாத்தியம் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோஸி எச்சரித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் மூன்று ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் கடுமையானவை தான். ஆனால் அவை முழுமையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
இது ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றுக்கு முரணானதாக அமைந்துள்ளது.
"வெளிப்படையாகச் சொன்னால், ஈரானிய அணுசக்தி தளங்கள் எல்லாம் அழிந்து விட்டன என்றும், அங்கே எதுவும் இல்லை என்றும் கூற முடியாது" க்ரோஸி தெரிவித்துள்ளார்.
அணுகுண்டு தயாரிப்பு
கடந்த ஜூன் 13ஆம் திகதி அன்று ஈரானில் உள்ள அணுசக்தி மற்றும் இராணுவ தளங்களை இஸ்ரேல் தாக்கியது, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலைக்கு நெருங்கிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து, அமெரிக்காவும் இந்தத் தாக்குதல்களில் இணைந்து, ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது.
குறித்த தாக்குதலில் ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களும் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
அதேவேளை, இது உண்மையில்லை எனவும் முற்றான அழிவு ஏற்படவில்லை எனவும் ஈரான் உள்ளிட்ட பல தரப்புக்களால் தெரிவிக்கப்பட்டு அது தொடர்பான அமெரிக்காவின் இரகசிய அறிக்கையும் வெளியில் கசிந்ததாக கூறப்பட்டது.
அமெரிக்க தாக்குதல்..
இது சரச்சையாக மாறிய நிலையில், அதற்கு ஈரானின் அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் அழிக்கப்பட்டன" என்று அறிவித்ததன் மூலம் ட்ரம்ப் ஆவேசமாக பதிலளித்தார்.
மேலும் "வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றை இழிவுபடுத்தும் முயற்சி" என்று ஊடகங்களைக் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து, ஈரானிய தங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் உண்மையான அளவு தெளிவாகத் தெரியவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோஸி கூறுகின்றார்.
அத்துடன், ஈரான் மீண்டும் யுரேனியத்தை செறிவூட்டத் தொடங்கும் திறனைக் கொண்டுள்ள நிலையில் சில மாதங்களில் அணுகுண்டை உருவாக்க சாத்தியம் உள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது மீண்டும் மத்திய கிழக்கில் ஒரு பதற்ற நிலையை ஏற்படுத்தும் அதேவேளை, அமெரிக்கா - ஈரான் மற்றும் ஈரான் - இஸ்ரேல் இடையே மீண்டும் போர் பதற்றத்தை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது என்பதில் ஐயமில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

30 ஆண்டுகள் என்ற ட்ரம்ப்: சில மாதங்களிலேயே தயாராகப்போகும் அணு ஆயுதம்.. ஈரானின் ட்விஸ்ட் News Lankasri
