லண்டனிலிருந்து ஜனாதிபதிக்கு வந்த அழைப்பு - தயக்கம் காட்டிய கோட்டபாய
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிநாடு செல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதற்கமைய ஜனாதிபதி முதலில் பிரித்தானியா செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் இடம்பெறவுள்ள சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் இரசாயன உர பயன்பாட்டுக்கு ஜனாதிபதி தடை விதித்துள்ளதுடன், சேதன பசளை பாவனையை ஊக்குவித்து வருகிறார். இந்த செயற்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்துள்ள லண்டன் மாநாட்டு அமைப்பாளர்கள், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
லண்டன் மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துமாறும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலில் அந்த அழைப்பை ஏற்காத ஜனாதிபதி பின்னர் அந்த அழைப்பினை ஏற்பதற்கு தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் லண்டன் நோக்கி செல்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. லண்டன் மாநாட்டின் பின்னர் நேரடியாக அமெரிக்கா நோக்கி செல்வதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
வொஷிங்டனில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.