கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளர் சமுதித்தவிற்கு அழைப்பாணை
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சமுதித்த அண்மையில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்கு மூலமொன்றை பதிவு செய்யும் நோக்கில் சமுதித்த குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாளை பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சமுதித்த கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மாடல் அழகி பியூமி ஹன்சமாலி, அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க உள்ளிட்டவர்கள் பயணத்தடை கலத்தில் கலந்து கொண்ட பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனவிடம் எழுப்பிய கேள்விகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கேள்விகளின் காரணமாகவே பியூமி உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக அண்மையில் சமுதித்த ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த அச்சுறுத்தல் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சமுதித்த நாளை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாகக் கூறி சமுதித்தவிற்கு எதிராக பியூமி தரப்பினர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.