ஹட்டனில் நடைபெற்ற ஐந்து நூல்களின் அறிமுக விழாவும் ஆய்வுரை கண்ணோட்டமும்...
மு.சி.யின் 5 நூல்களின் அறிமுக விழாவும் ஆய்வுரை கண்ணோட்டமும் நேற்று ஹட்டனில் நடைபெற்றது.
மலையக மக்களின் வாழ்வியலை சித்தரிக்கின்ற, இந்த ஐந்து நூல்களின் அறிமுக விழாவும் ஆய்வுரை கண்ணோட்டமும் ஹட்டன் கல்வி வலயத்தின் முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் க.மெய்யநாதன் தலைமையில் ஹட்டன் சன சமூக நிலையத்தில் நடைபெற்றது.
மக்களின் போராட்ட உணர்வு
குறித்த நிகழ்வில் மலையக மக்களின் அடக்கு முறை, ஏழ்மை, சுரண்டல், கங்காணிகளின் காட்டிக்கொடுப்பு, அரசியலில் இருக்கக்கூடிய போலித்தனங்கள், கோமாளித்தனங்கள், மக்களின் போராட்ட உணர்வு அக்கறை, அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் 200 வருட வரலாறு உள்ளிட்ட விடயங்கள் இந்த நூல்களில் எவ்வாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் எதிர்கால சமூகம் இந்த விடயங்களை அறிந்து குரல் கொடுக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது என்பதும் இங்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், வரவேற்புரையினை அருள்மொழி செல்வனும் உயிர் நாவல் பற்றிய ஆய்வுரையினை வீரகேசரியின் ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவக்குமாரும், மு.சிவலிங்கத்தின் படைப்புக்கள் பற்றிய கண்ணோட்டத்தினை சி.மகாலிங்கமும், ஏற்புரையினை நூலாசிரியர் மு.சிவலிங்கமும் நடத்தினர்.
அறிமுக விழா
குறித்த நிகழ்வில் சிவலிங்கம் சிவகுமாரன் உரையாற்றும் போது,''நுவரெலியா மாவட்டத்தில் 450 இற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு நுவரெலியா மாவட்டத்தில் ஒரு வைத்தியசாலை கூட இல்லாத நிலையில் 217 சாராய விற்பனை நிலையங்களுக்கு அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் பின்புலங்களில் உருவாக்கப்பட்டமை.''என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிகழ்வுக்கு பேராசிரியர் சந்திரபோஸ், பிரிடோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் எஸ்.கே.சந்திரசேகரன், முன்னாள் பிரதி அமைச்சர் ஜெகதீஸ்வரன், முன்னாள் மத்திய மாகாண கல்வி அமைச்சர் ராம். உட்பட கல்விமான்கள் அதிபர் எழுத்தாளர்கள், ஆசிரியர், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
