வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு விளக்கமறியல்
திருகோணமலை - நிலாவெளி பகுதியில் சட்டவிரோத வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று (25) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த எம்.எப்.எம்.றியாஜ் (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலாவெளி பிரதேசத்திலிருந்து இறக்கக்கண்டி பகுதிக்கு முச்சக்கர வண்டியில் 27 டைனமைட் மற்றும் 490 டெட்டனேட்டர்கள் ஐ கொண்டு செல்லும் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் சட்ட விரோத வெடி பொருட்களை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.