சினோபார்ம் செயற்றிறன் குறைவு! இலங்கையின் தீர்மானத்தை மறுக்கும் சர்வதேச ஆய்வு
சினோபார்ம் தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக பலவீனமான பிறப்பொருளெதிரியை வெளிப்படுத்தியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சினோபார்ம் தடுப்பூசி மிகவும் வினைத்திறனானது என இலங்கையின் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் அதிகளவில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசியாக சினோபார்ம் காணப்படுகின்றது.
இதுவரையில் இலங்கைக்கு 9.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், சினோபார்மின் பிபிஐபிபி-கோர்வி (BBIBP-CorV) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் பிறப்பொருளெதிரி அளவுகள் டெல்டா திரிபுக்கு எதிராக குறைவாக காட்டுவதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வருட பிற்பகுதியில் இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா திரிபு, உலகளவில் ஆதிக்கம் செலுத்திய வைரஸ் மாறுபாடாக மாறியுள்ளது. பிரித்தானியா, இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதோடு, உலகளவில் 90ற்கும் மேற்பட்ட நாடுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.
சீன தேசிய ஔடத குழுமமத்தின் தயாரிப்பான, சினோபார்ம் தடுப்பூசி, பீட்டா மாறுபாட்டிற்கு எதிரான பிறபொருளெதிரி அளவுகளில் 10 மடங்கு குறைவதைக் காட்டியதோடு, இது முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், சினோபார்ம் தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கு எதிராகவும் பலவீனமான பிறப்பொருளெதிரியை வெளிப்படுத்தியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சினோபார்ம் சீனாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசியாக காணப்படுகின்ற நிலையில், 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டமான கோவெக்ஸுக்கு 170 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்க சினோபார்ம் இணக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், சினோபார்ம் தடுப்பூசி மிகவும் வினைத்திறனானது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களில் 95 வீதமானவர்களுக்கு பிறபொருளெதிரி வலுவாகியுள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான நீலிகா மாலவ்கே மற்றும் சந்திம ஜீவன்தர ஆகியோரினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது.
இந்த தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை பெற்றுக்கொண்டவர்களில் 95 வீதமானவர்களுக்கு மிகவும் அதிகளவிலான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி கொரோனா வைரஸ் தொற்றின் பல்வேறு திரிபுகளையும் முறியடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.