ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றிய பணம்: தேசபந்து தென்னகோனின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை
கடந்த ஜூலை 9 ஆம் திகதி போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கைப்பற்றி கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளித்த ஒரு கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் முன்னர் நடந்த அனைத்து நடவடிக்கைகளும் ஒழுக்க விரோத செயல்கள் என பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.விக்ரமசிங்க நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான வழக்கு நேற்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்க உள்ளதாகவும் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அத்துடன் கைப்பற்றிய பணத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் மறுநாள் கையளிக்குமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிளுக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தேசபந்து தென்னகோனின் தொலைபேசி அழைப்பு

அமைச்சர் டிரான் அலஸிடம் பணத்தை வழங்குமாறு தென்னகோன் கூறிய தொலைபேசி அழைப்பு தொடர்பான குரல் பதிவை, பொலிஸ் விசேட விசாரணைப்பிரிவின் பணிப்பாளருக்கு வழங்குமாறு நீதவான் திலின கமகே, தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திற்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பு தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு உதவுமாறும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக்கூடத்தின் பொறுப்பதிகாரிக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தேசபந்து தென்னகோன் வழங்கிய தொலைபேசி அழைப்பு தொடர்பான கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் குறிப்பு சம்பந்தமான அறிக்கையும் நேற்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri