உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்(Photos)
நவம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவிருக்கின்றோம் என இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாமதத்திற்கான காரணம்
மேலும் தெரிவிக்கையில், செப்டெம்பர் 20ஆம் திகதியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட முடியும். ஆனால் புதிய வாக்காளர்களை கருத்திற்கொண்டு நவம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவிருக்கின்றோம்.
உள்ளூராட்சி சபைக்கு பொறுப்பான அமைச்சர் 2023 மார்ச் 20ஆம் திகதி வரை உள்ளூராட்சி சபையின் பதவிக்காலத்தை நீடிக்க செய்திருக்கின்றார். உள்ளூராட்சி சபை சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது உள்ளூராட்சி சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முந்திய நாளிலிருந்து தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகின்றது.
தேர்தலுக்கான பிரகடனம்
தேர்தலுக்கான பிரகடனத்தை வெளியிடும் போது எந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு நடைமுறையில் இருக்கிறதோ, அந்த வாக்காளர் இடாப்பையோ பயன்படுத்த வேண்டும்.
அந்தவகையில் 2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பை பயன்படுத்தி செப்டெம்பர் 20ஆம் திகதியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிட முடியும். ஆனால் அவ்வாறு செய்தால் 18 வயதைக் கடந்த 350,000 புதிய வாக்காளர்கள் வாக்குரிமையை பயன்படுத்த முடியாது.
அந்தவகையில் 2022 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 350,000 வரையானோர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டு நவம்பர் மாதம் அதனை அத்தாட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
அதன்பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் மார்ச் 20 க்கு முன்னதாக உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவோம்.”என கூறியுள்ளார்.
யாழில் கலந்துரையாடல்
யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இராஜேந்திரன் கிறிஸ்ரி அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்று வரும் குறித்த நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தேர்தல் ஆணையாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழு திரு சமன் ஸ்ரீ ரத்னநாயக்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதிதுவபடுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.