அரசியலமைப்பின் 13வது திருத்த அமுலாக்கம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
அரசியலமைப்பின் 13 வது திருத்த அமுலாக்கம், இந்தியாவிலிருந்து கடன் பெறுவதற்கான முன் நிபந்தனை அல்ல என்று இலங்கை அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.
ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alagaperuma) இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கொள்வனவுக்காக கடன் பெற இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கையில், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற விடயம் ஒரு முன்நிபந்தனையாக முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும், கடனைப் பெறுவதற்கான முன்நிபந்தனையாக இந்தியா 13 வது திருத்தத்தை வலியுறுத்தியதாக கூறப்படுவதை அழகப்பெரும மறுத்துள்ளார்.
இலங்கையில்,கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் தனது மசகு எண்ணெய் கொள்முதலுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம், இலங்கை கோரியுள்ளது.
நாட்டில் எரிபொருள் கிடைப்பதற்கு அடுத்த ஜனவரி வரை மட்டுமே
உத்தரவாதம் அளிக்க முடியும் என்று எரிபொருள் அமைச்சர் உதய கம்மன்பில
எச்சரித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.