வெள்ளவத்தையில் உயிரிழந்த தமிழ் யுவதி தொடர்பில் வெளியான தகவல்
வெள்ளவத்தை கடற்கரைக்கு அருகில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் ரயிலில் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதென வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மரண விசாரணை அதிகாரி வெளியிட்ட தகவல்
உடுப்புசல்லாவ, கோல்டன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாதவன் கிரிஜா என்ற யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது மூத்த சகோதரியான மாதவன் மனோஜா, களுபோவில, தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தேஷபந்து எஸ்.கே.பி.ஜனக கொடிகார முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
குறித்த பெண்கள் இருவரும் வெள்ளவத்தை கடற்கரைக்கு செல்வதற்காக ரயில் பாதையை கடக்கும்போது கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயில் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.