வவுனியா வைத்தியசாலையில் இறந்த சிசு! திடீர் முற்றுகை பிரிவினர் விசாரணை
வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் திடீர் முற்றுகை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குழந்தை மரணம்
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரசவித்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களின் பின் உயிரிழந்தது. குறித்த மரணத்திற்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என தெரிவித்து பாதிக்கப்பட்ட தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த சுகாதாரஅமைச்சின் கீழான திடீர் முற்றுகை பிரிவினர் மூன்று தினங்கள் தங்கியிருந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைவாக கடந்த 5,6,7ஆம் திகதிகளில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் பதிவுகள், ஆவணங்களையும் சோதனை செய்துள்ளனர்.
வாக்கு மூலம்
இதன்போது பாதிக்கப்பட்ட தாயை வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சுமார் 6 மணிநேரம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த திடீர் முற்றுகை பிரிவினர் வைத்தியசாலையிலுள்ள தாதியர்கள், வைத்தியர்கள், பொதுமக்கள், பணியாளர்கள், தாதிய பரிபாலகரின் கையொப்பம் அடங்கிய முக்கிய ஆவணங்கள், சிசு மரணமடைந்த போது கடமையில் இருந்தோர் விபரங்கள் என்பவற்றை பரிசோதித்துள்ளனர்.
இதேவேளை தனது குழந்தையின் மரணத்திற்கு குறித்த விசாரணை முடிவில் தீர்வு
கிடைக்கும் என தான் நம்புவதாக பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்துள்ளார்.





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
