ஜெனீவாவில் இந்தியா மௌனம்! இலங்கை வெளிவிவகார அமைச்சு முக்கிய கோரிக்கை
மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீராக்கப்பட்டு நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கம் சில விடயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், இந்த அறிக்கையை இறுதிப்படுத்த மூன்று வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பொறிமுறைகளின் பல விடயங்களை அமுலாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் குறிப்பிட்டுள்ள நிலையில், ஜெனீவாவில் தனது செயல்வடிவிலான ஆதரவை இந்தியா, இலங்கைக்கு வழங்கவேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.
இது வரை ஜெனீவாவில் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் இந்தியா எந்த ஒரு கருத்தையும் தெளிவாக வெளியிடாத சூழ்நிலையில் இக் கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்து நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.
தென்னாசிய நாடுகள் ஜெனீவாவில் ஆதரவளிக்காவிட்டால் இலங்கை மிகவும் குழப்பமடையும், இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் பாக்கிஸ்தான், இந்தியா, நேபாளம், பங்களாதேஸ் ஆகிய நாடுகள் இலங்கையை போன்று கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாலும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் எங்கள் ஜனாதிபதி ஆதரவுகோரும் கடிதத்தை முதலில் இந்திய பிரதமருக்கே அனுப்பினார், ஏனென்றால் தென்னாசிய ஒற்றுமை குறித்து நாங்கள் உணர்வுபூர்வமாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகும்.
அத்துடன் இலங்கைக்கு அதன் அயல்நாடுகளின் ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது. நாங்கள் மிகவும் அசாதாரணமான ஒன்றை கேட்கவில்லை நாங்கள் அயலவர்களிற்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையை அடிப்படையாகவே இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம் என அவர் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.