முல்லைத்தீவிலும் கடற்தொழிலாளர்களின் வலைகளை நாசம் செய்த இந்திய இழுவைப்படகுகள்!
முல்லைத்தீவு - கள்ளப்பாட்டு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளர்களின் நான்கு தொழிலாளிகளின் வலைகளை இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகள் அறுத்து நாசம் செய்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
கள்ளப்பாட்டு பகுதியினை சேர்ந்த நான்கு மீனவர்கள் நேற்று (11) கடற்தொழிலுக்கு சென்றுள்ளார்கள்.
கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுப்பட்ட வேளை மாவட்ட கடற்தொழிலாளர்களின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப்படகுகள் வலை அறுத்து கடல் தொழில் உபகரணங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
நான்கு கடற்தொழிலாளர்களின் தொழில் உபகரணங்கள் சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட கடற்தொழிலாளர் சங்க தலைவரிடம் முறையிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அண்மைக்காலமாக இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் உபகரணங்களை நாசம் செய்து வருகின்றன.
அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்ட கடற்தொழிலாளர்களின் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.