யாழ். வடமராட்சியில் தொடரும் இந்திய கடற்றொழிலாளர்களின் அட்டகாசம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4 கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (22) நான்கு படகுகளும் தங்களது கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது இடம்பெற்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கடற்றொழிலாளர்கள் இந்திய இழுவைமடி படகுகளை விரட்ட முனைந்தும் பாதுகாப்பற்ற காரணங்களால் அறுந்த மிகுதி வலைகளுடன் உடனடியாக கரைக்கு திரும்பினர்.
அத்துமீறல்கள்
எனினும், இந்திய கடற்றொழிலாளர்களது செயற்பாட்டால் இரண்டு படகுகளுக்கு சொந்தமான வலைகள் எதுவும் மிஞ்சாத நிலையில் குறித்த இரண்டு படகுகளும் எந்தவொரு வலைகளும் இல்லாமல் வெறுமனே கரைக்கு திரும்பியது.
மிகுதி இரண்டு கடற்றொழிலாளர்களும் சொற்ப வலைகளுடன் கரைக்கு திரும்பி வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரிடம் சம்பவம் குறித்து முறையிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து எமது பிரதேச செய்தியாளர் வெற்றிலைக்கேணி கடற்படை
பொறுப்பதிகாரியை வினவிய போது,
அத்துமீறி இந்திய இழுவை படகுகள் கரைக்கு வந்த தகவல் அறிந்தும் ஒரு சில டோரா
படகுகளின் உதவியுடன் தாம் விரட்டி அடித்ததாகவும் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் இனியும் அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படாதவாறு
நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல்களை அண்மைக்காலமாக தடுத்து நிறுத்தியதாகவும், கச்சதீவு திருநாளை முன்னிட்டு பாதுகாப்பில் இருந்த சில டோரா படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இனி இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




