கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளருக்கு விளக்கமறியல்
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற நிலையில், ஒரு விசைப்படகுடன் நான்கு கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு இரணைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மன்னார் வடக்கு இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பிற்குள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல்
இதனைத் தொடர்ந்து இன்று (14.04.2026) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் திரு எஸ். சிவபாலசுப்ரமணியம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த நால்வரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டதாக 21 படகுகளுடன் 145 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.