இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த இதை மாத்திரமே செய்ய முடியும் - வடக்கு கடற்படை கட்டளை தளபதி
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த எங்களால் அவர்களை கைது செய்ய மட்டுமே முடியும், அவர்களை கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கையளிப்பதுடன் எங்கள் கடமை முடிந்து விடும் என வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துமீறல்கள்
மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவது எமக்கு சவாலானது. கடற்படை படகுகளுக்கான எரிபொருள் அதிகளவில் தேவைப்படும்.
அதனால் எரிபொருள் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம். கடற்படையினர் ஒரு டோரா படகில் போனால், இந்திய கடற்தொழிலாளர்கள் 50 - 100 படகுகளில் பெருமெடுப்பில் வருவார்கள்.
கடற்படையின் படகினை கண்டதும் இந்திய எல்லைக்குள் ஓடி விடுவார்கள். எங்களால் துரத்தி பிடிக்க முடிந்தளவு படகையும், கடற்தொழிலாளர்களின் கைது செய்கிறோம். எங்களால் கடற்தொழிலாளர்களை கைது செய்ய மட்டும் தான் முடியும். கைது செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்போம்.
கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத நடவடிக்கை
அதனை மட்டுமே கடற்படையால் செய்ய முடியும். இந்திய கடற்தொழிலாளர்கள் விடயத்தில் அரசாங்கம் எமக்கு எந்த அழுத்தமும் தருவதில்லை. இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் போன்றே, உள்ளூர் கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் கடற்தொழிலாளர்களின் சட்டவிரோத செயல்களை தனியே கடற்படை மாத்திரம் தடுக்க முடியாது. அதற்கு மக்களின் சமூகத்தின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
