எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்தொழிலாளர்கள் கைது!
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்தொழிலாளர்கள் ஆறு பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படை, தருவைகுளம் கடற்தொழில் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான வஜ்ரா ரோந்து கப்பல் சர்வதேச கடல் பகுதியில் 120 கடல் மைல் தொலைவில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது, இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையைச் கடற்தொழிலாளர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இலங்கை கடற்தொழிலாளர்கள் ஆறு பேரையும், அவர்களது படகையும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் ஆறு பேரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் ஆறு பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் இன்று மாலை தூத்துக்குடி தருவைகுளம் கடற்தொழில் துறைமுகத்திற்க்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம், மத்திய, மாநில உளவுத்துறை, சுங்கத் துறையினர், மீன்வளத் துறையினர், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கடற்தொழிலாளர்களின் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு 6 பேரையும் நாளை ராமநாதபுரம்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள்
என மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.