ஈஸ்டர் தாக்குதல் குறித்து இந்தியா எச்சரித்தமையை சபையில் ஒப்புக்கெண்டுள்ள ரணில்
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க ஒப்புக் கெண்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், பொலிஸார் இந்தப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் செயற்படத் தவறியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தந்தை அறிவித்திருந்தார் என்பது உண்மை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹரீனின் சகோதரிக்கு ஹரீனின் தந்தை இது குறித்து கூறியதாகவும் அவரே ஹரீனிடம் இது பற்றி கூறியதாகவும், அந்த விடயத்தை தம்மிடம் ஹரீன் கூறியதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் ஹரீன் பெர்னர்ணடோவின் தந்தை கூறியது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமா என ரணில் கேள்வி எழுப்பியுள்ளார்.