விடுதலைப்புலிகள் விவகாரம்! 10 இலங்கையர்கள் தொடர்பில் இந்திய என்.ஐ.ஏ தகவல்
இந்தியா மற்றும் இலங்கையில் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சியை நோக்காக கொண்டு, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 10 இலங்கையர்கள் உட்பட்ட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு பிரிவு நேற்று (16.06.2023) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக இவர்கள் போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தேசிய என்ஐஏ என்ற தேசிய புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.
குற்றச்சாட்டு ஆவணத்தில் செல்வகுமார், எம். விக்கி என்கிற பெருமாள், ஐயப்பன் நந்து என்ற மூன்று இந்தியர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத வர்த்தகம்
பாகிஸ்தானில் வசிப்பதாகக் கருதப்படும் ஹாஜி சலீம் என்பவர் தான் போதைப்பொருட்களுக்கான ஆதாரமாக இருந்ததாக அறிக்கை கூறுகிறது.
அத்துடன் பூங்கொடி கண்ணன் என்ற புஷ்பராஜா, குணசேகரன் என்ற குணா, மொஹமட் அஸ்மின், அழகப்பெருமக சுனில் காமினி பொன்சேகா, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, தனுக்க ரொஷான், நளின் சதுரங்க, கமகே சுரங்க பிரதீப், திலீபன் மற்றும் தனரத்தினம் நிலுக்ஷன் என்பவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்களான விக்கி மற்றும் நந்து கைது செய்யப்பட்ட நிலையில், ஏனையவர்கள் 2022 டிசம்பரில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சந்தேகநபர்கள் வெளிநாட்டு வாட்ஸ்அப் எண்களைப் பயன்படுத்தி சட்டவிரோத வர்த்தகத்தை நடத்தி வருவதாக என்ஐஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
