இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
புதிய இணைப்பு
இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்கள் தொப்புள் கொடி உறவாக கடற்றொழில் ஈடுபட இரு நாட்டு அரசாங்கமும் பேசி தீர்வு காண வேண்டும் என இந்திய இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (26) இடம்பெற்ற இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதம் மாவட்டத்தில் இருந்து வந்து 5 பேர் கொண்ட குழுவாக நான்கு மாவட்ட இலங்கை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுடன் எமது நிறைகுறைகளை பேசி மகிழ்ந்தோம்.
அவர்களுடைய கஸ்ர நிலைகளை எங்களிடம் கூறினார்கள். எங்களுடைய கஸ்ர நிலமைகளையும் நாங்கள் கூறினோம். இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை இருந்தது.
சுமுகமாக நடைபெற ஏற்பாடு செய்த இலங்கை கடற்றொழிலாளர் சமாசத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். கடந்த 9 வருடங்களுக்கு முன் இரண்டு அரசாங்கங்களும் பேசிய பின் கடற்றொழிலாளர் பிரச்சினை பேசப்படவில்லை. 9 வருடங்களில் இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த பாதிப்பை எவ்வாறு நிறுத்துவது என்று பேசப்பட்டது. அவர்களது கோரிக்கை இந்திய இழுவலைகளை முற்றாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்தினால் கடல்வளம் பாதுகாக்கப்படும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
முதலாம் இணைப்பு
இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில்(Vavuniya) ஆரம்பமாகியுள்ளது.
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் குறித்த பேச்சுவார்த்தை இன்று (26) இடம்பெற்று வருகின்றது.
இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படுவது தொடர்பாக முதல் கட்டமாக இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களிடையே கடற்றொழிலாளர்களின் சொந்த முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதன்படி குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, இந்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகளை இலங்கை கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன், இந்திய கடற்றொழிலாளர்களும் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு நினைவு பரிசில்களை வழங்கி பேச்சுவார்தையை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுதல், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்த்துதல், இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமை, இரு நாட்டு கடற்றொழிலாளர் உறவு தொடர்பில் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக கடற்றொழிலாளர்கள்
இந்தச் சந்திப்பில், இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழுவினரும், இலங்கை கடற்றொழிலாளர்கள் சார்பில் சுப்பிரமணியம் (யாழ்ப்பாணம்), மரியராசா (முல்லைத்தீவு), ஆலம் (மன்னார்), பிரான்சிஸ் (கிளிநொச்சி), அந்தோணி பிள்ளை (கிளிநொச்சி), சங்கர் (மன்னார்) ராமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), அன்னராசா (யாழ்ப்பாணம்), வர்ண குலசிங்கம் (யாழ்பாணம்) உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, தமிழக கடற்றொழிலாளர்கள் முதல்கட்டமாக ஒரு மாத காலம் இலங்கை கடற்பரப்புக்குள் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த முதல் கட்ட கடற்றொழிலாளர்களுக்கு இடையேயான கடற்றொழிலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.
தடுத்து வைக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட கடற்றொழிலாளர்களை பார்வையிட்ட இந்திய கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை இந்திய கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் பார்வையிட்டு கலந்துரையாடினர்.
வவுனியாவிற்கு வருகை தந்த இந்தியாவின் இராமேஸ்வரம் மாவட்டத்தின் இந்திய விசைப்படகு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப் படகு கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ, மண்டபம் விசைப்படகு கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த இருதயராஜு ஜஸ்ரின், தங்கச்சிமடம் விசைப்படகு கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஜெருசிமான்ஸ், பாம்பன் விசைப்படகு கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ராஜப்பன் சகாயம் ஆகியோர் இன்று (26.03) பிற்பகல் வவுனியா சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டனர்.
எல்லை தாண்டியும், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியும் கடற்றொழிலாளர் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 வரையான இந்திய கடற்றொழிலாளர்களை அவர்கள் பார்வையிட்டதுடன், அவர்களது தற்போதைய நிலைமை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.
வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த கடற்றொழிலாளர்களை பார்வையிட இந்திய கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுக்கு விசேட ஏற்பாடுகளையும் செய்து கொடுத்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



