75 ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து பாரிய எழுச்சி போராட்டத்துக்கு தயாராகும் தமிழர் தாயகம் (Photos)
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை எதிர்த்து, போராட்டம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மக்கள் எழுச்சி பேரணி
இலங்கையில் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து, மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி போராட்டத்திற்கான முன்னாயத்த பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மதகுருமார், சிவில் அமைப்புக்கள் என பலதரப்பினரை இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடி தமது போராட்டத்திற்கான அழைப்புக்களை கோரிய நிலையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் தென்கையிலை ஆதின குருமுதல்வர் உட்பட்ட சிவில் அமைப்புக்கள் மதகுருமார் தமது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கையிலும் சுதந்திர தினத்தில் எதிர்ப்பு போராட்டங்கள்
தொடர்ச்சியாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் போராட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில், மத தலைவர்கள், புதுக்குடியிருப்பு சமூக செயற்பாட்டாளர் விஜி, முன்னாள் விவசாய அமைச்சர் பவன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஈஸ்வரி, புதுக்குடியிருப்பு உபதவிசாளர் ஜனகமேனன் ஆகியோரை சந்தித்து குறித்த போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
அதேபோல் நேற்றைய தினம், யாழ் .மறை மாவட்ட குரு முதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்து பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி எதிர்வரும் சுதந்திர தினத்தில் தமிழர் தாயகத்தில் பாரிய எழுச்சி போராட்டம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை வழமைக்கு மாறாக இந்த முறை தென்னிலங்கையிலும் சுதந்திர தினத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.