சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம்! மட்டக்களப்பு நகரை நோக்கி செல்லும் பேரணி
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி மட்டக்களப்பு- கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது திருகோணமலை வீதியூடாக மட்டக்களப்பு நகரத்திற்கு சென்று கொண்டு இருக்கின்றது.
இந்தப் பேரணியிலே கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் உறவுகள்,அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கரிநாள்
ஒரு போராட்டம் சுதந்திரமாக நடாத்த முடியாத எங்களுக்கு இந்த நாட்டில் ஒவ்வொரு தேசிய சுதந்திர தினமும் கரிநாள் தான் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு காந்திபூங்காவரையில் ஊர்வலம் செல்ல ஆயத்தமான நிலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு ஊர்வலத்தினை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் காந்திபூங்காவில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுவதன் காரணமாக அங்கு செல்லமுடியாது என பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர்.

எனினும் தமது போராட்டம் வழமையாக காந்திபூங்காவில் நிறைவடைவதனால் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு காணாமல்போனவர்களின் உறவினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
எனினும் அங்குசெல்வதற்கு அனுமதிக்கமுடியாது என பொலிஸார் தெரிவித்த நிலையில் கல்லடி பாலத்தில் ஆரம்பித்து தனியார் பஸ் நிலையத்தில் போராட்டத்தினை முடிப்பது என பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து போராட்டம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
போராட்டம்
எனினும் தாங்கள் தமது போராட்டத்தினை நகர் ஊடாகவே செல்வோம் என வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சிவில்சமூக பிரதிநிதிகள் பொலிஸாருடன் முரண்பட்டு தள்ளுப்பட்ட நிலையில் பொலிஸார் அப்பகுதி ஊடாக செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளைப்பாலத்திற்கு அருகில் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு அவ்விடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் கரிநாள் பிரகடனம் வாசிக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும்,வடகிழக்கின் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்,திட்டமிட்ட நில அபகரிப்புகளை நிறுத்து,தமிழர்களை அடக்கியொடுக்குவதை நிறுத்து,ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதிகொடு,காணமல்ஆக்கப்பட்டவர்கள் எங்கே,திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்து போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டன.
கோத்தபாயவின் ஆட்சிக்காலத்தில் கூட இல்லாத நெருக்கடிகள் இன்றைய அனுர ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்தவர்கள் தெரிவித்தனர்.







