யாழில் போதைப்பொருள் பாவனை: அதிகரிக்கும் நுரையீரல் மற்றும் இருதய வால்வு கிருமி தொற்று
போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய வால்வு பிரச்சினை காரணமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளையோர் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர்.
அவ்வாறானவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது, நுரையீரல் மற்றும் இருதய வால்வு ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வு
அது தொடர்பில் அவர்களிடம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில் அவர்கள் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்வதான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.
அதேவேளை சுவாசிக்க முடியாமல் சிரமத்துடன், கடும் காய்ச்ச்சலுடனும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் இளையோருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களுக்கும் இருதய வால்வில் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவர்களும் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்பவர்கள் எனவும் இவ்வாறாக தினமும் சராசரியாக மூவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஒரு வருட காலத்தில், யாழ்ப்பாணத்தில் ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வினால் 15ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பில் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |