பல மடங்காக குறைந்துள்ள வருமான வரி வருவாய்
கடந்த 2020 ஆம் முடிவு வரை தேசிய இறைவரி திணைக்களம் பராமரித்து வரும் வரி செலுத்த வேண்டியவர்களின் வருமான வரி ஆவணங்கள் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் என்ற போதிலும் அவர்களில் 13 சத வீதத்தினரே வருமான வரியை செலுத்தி வருவதாக தெரியவருகிறது.
இது சாதாரணமாக 35 ஆயிரம் என கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வருமான வரி செலுத்த வேண்டிய குறைந்த பட்ச வருமானம் 30 லட்சம் ரூபாய் என அதிகரித்தால், 2021 ஆம் ஆண்டு கையாளப்பட்டு வந்த செயற்பாட்டு ரீதியான வருமான வரி செலுத்துவோரின் ஆவணங்களின் எண்ணிக்கை 16 ஆயிரமாக குறையலாம் என திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 ஆம் ஆண்டு 10 பில்லியன் ரூபாயாக இருந்த மொத்த வருமான வரி வருவாய், 6 பில்லியன் ரூபாய் வரை 2021 ஆம் ஆண்டில் குறையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மாத்திரமன்றி தேசிய இறைவரி திணைக்களத்தை பராமரிக்க ஆகும் செலவை கவனத்தில் கொள்ளும் போது, ஒரு ரூபாய் பணத்தை சம்பாதிக்க மேலதிகமாக ஒரு ரூபாய் செலவாகும் என திணைக்களத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வருமான வரி செலுத்தும் சுமார் ஆயிரத்து 500 நிறுவனங்கள் இருப்பதுடன் அவற்றின் மூலம் வரி வருமானமாக 40 பில்லியன் ரூபாய் கிடைக்கின்றது. எனினும் உண்மையில் வருமான வரி செலுத்த வேண்டிய வர்த்தகர்களின் எண்ணிக்கையானது இதனை விட மூன்று மடங்காக இருக்கும் எனவும், பெரும்பாலானர்கள் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு வருமானத்தை குறைத்து காட்டி, வருமான வரியை செலுத்தாது இருந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் நிறுவனங்களின் வருமான ஆவணங்களை கணக்காய்வு செய்வதை தவிர்க்குமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் தமக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் தேசிய இறைவரி திணைக்களத்தின் ஊழியர்கள் கூறியுள்ளனர்.