கிழக்கின் பல பகுதிகளிலும் வன்முறையை தூண்டும் சம்பவங்கள்: பொலிஸார் தீவிர விசாரணை (Photos)
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக பல தரப்பினர் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்துள்ள நிலையில், அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளின் முக்கிய சந்திகளில் டயர்கள், மரக்குற்றிகள் என்பன போடப்பட்டு எரியூட்டபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அடையாளந்தெரியாதவர்களால் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளன.
எதிர்வரும் தினங்களில் நாட்டின் முக்கிய அரசியல் நிலைமை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், டயர்கள் போடப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளன.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு, தாளவட்டுவான் சந்தி, நற்பிட்டிமுனை சந்தி உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு டயர்கள், மரக்குற்றிகள் உள்ளிட்டவைகள் பிரதான பாதையில் போடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் அவ்விடத்திற்கு வருகை தந்து எரியூட்டப்பட்ட டயர்கள், மரக்குற்றிகளை அகற்றி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் அவசர கால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலுள்ள நிலையில், அப்பகுதியினால் பயணம் செய்யும் மக்களும் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்துவதை காணமுடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.