அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சுட்டு சம்பவம் கண்டிக்கத்தக்கது - இரா. துரைரெத்தினம்
அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக வீதியில் வைத்து நிராயுதபாணியாக வந்த இளைஞர் ஒருவர் அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது கண்டிக்கத்தக்கது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத் தலைவருமான இரா. துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொக்குவில் 176 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட, மட்டக்களப்பு இருந்து வாழைச் சேனைக்கு செல்லும் வீதியிலுள்ள மன்றேசாவிற்குச் செல்லும் பாதையில் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வாஸ்தல் தலம் அமைந்துள்ளது.
இங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் முற்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரை முற்சக்கர வண்டியிலிருந்து இறங்கி வருமாறு அழைத்துச் சுட்டதாகக் கூறப்படுகின்றது.
இக் கொலையானது தீர விசாரிக்கப்பட வேண்டும். தீர விசாரணை செய்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இக் கொலை தொடர்பாக எந்தவித செயற்பாடுகளும் மறைக்கப்படக்கூடாதென மக்கள் விரும்புகின்றனர்.
சட்டம் தனது கடமையைச் செய்வதற்கு அமைச்சரும், பொலிஸாரும் வழி விட வேண்டும். பொலிஸாரின் நடவடிக்கையானது எந்தவிதத்திலும் மனித சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படாது. ஒரு நிரபராதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிப்பதென்பது எந்த சமூகத்தினராலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தீர விசாரணை செய்து குற்றவாளிக்குத் தண்டனை வழங்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்களுக்கு மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப்(ப.ம) இரா.துரைரெத்தினம் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.