ஊடகவியலாளர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் கடுமையான கண்டனத்துக்குரியது: ந.ஸ்ரீகாந்தா
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் ஊடகவியலாளர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் கடுமையான கண்டனத்துக்குரியது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2 ஆம் திகதி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் ஊடகவியலாளர் ஜெ. சுலக்சன் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் கடுமையான கண்டனத்துக்குரியது.
முறையீடு செய்வதற்குச் சென்ற ஒருவருக்கு பொலிஸ் நிலையத்தில் வைத்து துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.
இச்சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை, பாரபட்சம் இன்றியும், முழுமையாகவும், விரைவாகவும் நடாத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று நாம் கோருகின்றோம்.
யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச் சம்பவம் தொடர்பில் குரல் எழுப்புவதன் ஊடாக தமது கடமையைச் செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.