19 வருடங்களாக எல்லை நிர்ணயம் செய்யப்படாமலிருக்கும் இரு பிரதேச செயலகப்பிரிவுகள் தொடர்பில் முக்கிய தீர்மானம்
19 வருடங்களாக எல்லை நிர்ணயம் செய்யப்படாமல் இருக்கும் கோறளைப்பற்றின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளையும் உடனடியாக எல்லை நிர்ணயம் செய்ய பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 வருடங்களாக எல்லை நிர்ணயம் செய்யப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளையும், உடனடியாக எல்லை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முன்னுரிமைத் தீர்மானம் மேற்படி இரு பிரதேச செயலங்களில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டிற்கானதும் புதிய அரசாங்கத்தின் முதலாவதுமான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் தலைமையில் திங்கட்கிழமை மேற்படி இரு பிரதேச செயலகங்களிலும் புறம்பாக இடம்பெற்றன.
பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், அதன் செயலாளர்கள், அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களின் அதிகாரிகள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், முன்னுரிமையின் அடிப்படையில் இவ்விரு பிரதேச செயலகப்பிரிவுகளையும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் எட்டப்பட்டது.
இவ்விரு பிரதேச செயலகப் பிரிவுகளையும் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்துவதன் ஊடாக நிர்வாக முரண்பாடுகளை நீக்கி அரச நிருவாக நடவடிக்கைகளை இலகுவாக மக்களின் காலடிக்குக் கொண்டு சேர்ப்பிக்க வழியேற்படும் என்றும், அங்கு அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இப்பிரதேச செயலகங்கள் 1999 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பன்னம்பலன ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைவாகவும், 13.07.2000 ஆம் ஆண்டின் அமைச்சரவைப் பத்திரம் 00/1355/05/65 இலக்க தீர்மானத்திற்கு அமைவாகவும், 2002.05.25 ஆம் திகதி உருவாக்கப்பட்டதாகும்.
எனினும் இவை ஸ்தாபிக்கப்பட்டு சுமார் 19 வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் இப்பிரதேச செயலகப் பிரிவுகளுக்குரிய எல்லைகளும், நிருவாகப் பிரிவுகளும் உரியமுறைப்படி பகிர்ந்தளிக்கப்படவில்லை.
அதேவேளை, இதே காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அங்கீகரிக்கப்பட்டு முழுமையான நிருவாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.
ஆனால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயகத்திற்கென பல ஆணைக்குழுவினாலும், அமைச்சரவையினாலும் சிபாரிசு செய்யப்பட்ட 240 சதுர கிலோமீற்றர் நிருவாக அலகு வழங்கப்படாமல் வெறும் 7.8 கிலோ மீற்றர் நிருவாகப் பகுதி மாத்திரமே வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு உரித்தான 176 சதுர கிலோமீற்றர் வழங்கப்படாது வெறும் 22 சதுர கிலோமிற்றர் பரப்பளவைக் கொண்டே அப்பிரதேச செயலகப் பிரிவு இயங்கி வருகின்றது.
எனவே இது வெளிப்படையான சமூக ஓரங்கட்டலும் பாரபட்சமுமாகும்.எனவே இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏகமானதாக வலியுறுத்தப்பட்டது.
இந்த விடயம் உடனடியாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.








30 ஆண்டுகள் என்ற ட்ரம்ப்: சில மாதங்களிலேயே தயாராகப்போகும் அணு ஆயுதம்.. ஈரானின் ட்விஸ்ட் News Lankasri
