பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தாமதமாகும் கொடுப்பனவு : இம்ரான் எம்.பி கோரிக்கை கடிதம்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கொடுப்பனவினை வழங்குமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை கடிதமொன்றை கையளித்துள்ளார்.
கிராம சேவகர்களுக்கு தெளிவான அனுமதியினை வழங்குமாறு கிண்ணியா பிரதேச செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்து பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பன சேதமடைந்துள்ளன.

இவ்வாறு பாடசாலை உபகரணங்கள் இல்லாத மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதெற்கென உதவித் தொகையாக ரூபா 15,000 வழங்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும், கிண்ணியாவில் உள்ள பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறான உதவித்தொகை வழங்கப்படவில்லை என பலரும் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
கிராம சேவகர்களிடம் வினவியபோது மேலதிகாரிகள் தெளிவான அனுமதியோ, உத்தரவோ வழங்காமல் தம்மால் சில விடயங்களை சுயமாக செய்யமுடியாது என கூறுகின்றனர்.

எனவே, புதிய கல்வி ஆண்டுக்கான பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் கிண்ணியா பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவினை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் பிரதி, உரிய நடவடிக்கைக்காக மாவட்ட செயலாளருக்கு அனுப்பட்டுள்ளது.