இலங்கையின் கடன் நிலைத்தன்மை ஆபத்தான நிலையில் !
இலங்கையின் கடன் செலுத்தும் திறன் (கடன் நிலைத்தன்மை) இன்னும் அதிக ஆபத்தான மட்டத்திலேயே உள்ளதாக எச்சரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியதைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை இன்னும் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் குறித்து அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
[NIIUH ]
இதன்படி, பொருளாதார வளர்ச்சித் திறனை மேம்படுத்துவது இன்றியமையாதது என சர்வதேச நாணய நிதியத்தின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்காக, முறையாகத் தயாரிக்கப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட பொது உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக இயக்குநரும் தற்காலிகத் தலைவருமான கென்ஜி ஒகமுரா தகவல் வெளியிட்டுள்ளார்.
திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் வலுவாக இருந்தபோதிலும், பொது நிதி மற்றும் முதலீட்டு மேலாண்மை, மற்றும் மின்சாரத் துறை சீர்திருத்தங்களை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் அவசியமாவதாக தெரிவித்துள்ளார்.
வரி முறையை மேலும் திறம்பட மாற்றுவதற்கும், வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் வருவாய் ஈட்டலைத் தொடர்ந்து முன்னெடுப்பது இன்றியமையாததாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இது முக்கியமாக நடுத்தர கால வருவாய் ஈட்டும் மூலோபாயத்தை உருவாக்குவதன் மூலம் சாத்தியப்பட வேண்டும் எனவும் கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் நிலையை எட்டியிருந்தாலும், கடன் நிலைத்தன்மை குறித்த அபாயம் இன்னும் உயர் மட்டத்திலேயே காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.