சட்டவிரோத மீன்பிடி: தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 22 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக கடற்றொழிலாளர்கள் 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைதான கடற்றொழிலாளர்கள்
அத்துடன், கடந்த 28 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 2 படகுகளுடன் மேலும் 14 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கமைய, குறித்த 26 தமிழக கடற்றொழிலாளர்களும் ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று(08) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்றொழிலாளர்களில் ஒருவர், ஒரு படகின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவரின் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், படகின் உரிமையாளர் உள்ளிட்ட நால்வரையும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை அடிப்படையில் நீதவான் விடுதலை செய்துள்ளார்.
ஏனைய 22 கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



