யாழ்ப்பாண கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: இந்திய கடற்றொழிலாளர்கள் மீது குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் எல்லை தாண்டி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளில் ஈடுபடுவதாக உள்ளூர் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைத் தடுப்பதில் கடற்படையினர் மெத்தனமாக செயல்படுகின்றனர் என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (10.04.2026) நாகர்கோவில் கிழக்கு திசையில், கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இந்தியப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் ‘குல்லா’ எனப்படும் படகுகளில் வந்து, இலங்கைக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட ‘லாம்பு’ (Light Course) மீன்பிடி முறையில் ஈடுபட்டதை அப்பகுதி கடற்றொழிலாளர்கள் நேரில் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த உள்ளூர் கடற்றொழிலாளர்கள் குறித்த அத்துமீறல்களை தமது கையடக்கத் தொலைபேசிகளில் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
உள்ளூர் கடற்றொழிலாளர்களின் குற்றச்சாட்டுகள்
இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த வடமராட்சி கடற்றொழிலாளர்கள் பின்வரும் முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்,

“நாங்கள் எமது கடற்பரப்பில் வாழ்வாதாரத்திற்காக தொழில் செய்யும்போது, சிறிய விதிமீறல்களைக் காரணம் காட்டி கடற்படையினர் எங்களை கைது செய்கின்றனர். ஆனால், எல்லை தாண்டி வந்து எமது வளங்களைச் சூறையாடும் இந்திய கடற்றொழிலாளர்களை அவர்கள் கவனிக்கவில்லை,” என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘லாம்பு’ மீன்பிடி முறை இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறான முறைகள் கடல் வளங்களை முற்றாக அழிக்கும் அபாயம் உள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான அத்துமீறல்களால் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வலைகள் சேதமடைவதோடு, அவர்களது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோரிக்கை
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய கடற்றொழிலாளர்களைக் கட்டுப்படுத்தவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமராட்சி கிழக்கு மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன், உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடற்படையினர் கடைப்பிடிக்கும் சட்டக் கட்டுப்பாடுகளை, எல்லை தாண்டி வரும் அந்நிய கடற்றொழிலாளர்கள் மீதும் சமமாகப் பயன்படுத்தி கடல் வளங்களையும் எல்லையையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்