சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்து
சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் உள்ளூராட்சி மன்றங்களை முன்னெடுக்குமாறும் அதை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்த வேண்டாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.
உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (22.07.2025) நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், சில உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கழிவு முகாமைத்துவம்
மக்களுக்கான அமைப்பே உள்ளூராட்சிமன்றம் என்பதை நினைவிலிருத்திச் செயற்பட வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், சோலைவரி மாற்றம், கட்டட அனுமதி உள்ளிட்ட விடயங்களை எவ்வளவு விரைவாக செய்து கொடுக்க முடியுமோ அதைச் செய்து கொடுக்குமாறு வலியுறுத்தினார்.
இதன்போது, உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
கழிவு முகாமைத்துவம் தொடர்பான விடயத்தில் குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்குவதில் பின்னடிக்கும்போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்றங்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் குறிப்பிட்டனர்.
கண்டி மாவட்டத்தில் உணவு பொதி செய்வதற்கு அல்லது உணவை உண்பதற்கு பயன்படுத்தப்படும் 'லஞ்ச் சீற்றை' துப்புரவு செய்து கொடுத்தாலேயே உள்ளூராட்சி மன்றங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைமை இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் இங்கு இவ்வாறான இறுக்கமான நடைமுறைகளை சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












