தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்திற்கு இணங்க முடியாது: சித்தார்த்தன் திட்டவட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவிப்பின் மூலம், ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே என்றவாறான நிலைப்பாட்டை கூறியிருப்பதாகவே தெரிகின்றது. அப்படியான நிலைப்பாட்டிற்கு நாங்கள் இணங்க முடியாது என யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா இன்று (29.09.2024) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுச்சபை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயற்ப்பட வேண்டும் என்பது நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்ற விடயம். ஒரு கட்சி மற்ற கட்சியின் மீது ஆதிக்கம் செலுத்துவதை விடுத்து உண்மையான கூட்டாக செயற்பட வேண்டும்.
தமிழரசுக்கட்சியின் தீர்மானங்கள்
அன்று தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் நாங்கள் கூட்டமைப்பாக செயற்ப்பட்ட போது பல பிரச்சினைகள் உருவாகியிருந்தன. கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தாங்கள் தனியாக போட்டியிடப் போவதாக தமிழரசுக்கட்சி முடிவெடுத்திருந்தது.

அதன் பின்னர் சம்பந்தருடன் நாங்கள் கலந்துரையாட சென்ற போதும் அவர் மிகத்தெளிவாக அதே கருத்தை சொல்லியிருந்தார். நீங்கள் தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய பார்க்கிறீர்களா என்று அவரும் சொன்னார்.
இருப்பினும், கூட்டமைப்பை விட்டு தமிழரசுக்கட்சி சென்றாலும் நாங்கள் இயங்காமல் இருக்க மாட்டோம் தானே. அப்படி இருக்கவும் கூடாது. எனவே, நாங்கள் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினூடாக உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்தோம்.
இப்போது பல கட்சிகள் இணைந்திருக்கின்றன. அவர்கள் தான் விட்டுச் சென்றவர்கள். எனவே அவர்கள் தான் வரவேண்டும். அவர்கள் வந்தால் எமது கட்சிகளோடும், சிவில் அமைப்புகளின் கூட்டோடும் கலந்துரையாடிய பின்னரே முடிவினை எடுக்கலாம்.
தனிப்பட்ட முறையில் சொன்னால் அவர்களது வரவு இந்த கட்டமைப்பை பெரிதாக்கும். அது எனக்கும் விருப்பம். அனைவரும் இணைவது தமிழ் மக்களுக்கு பலமாகவும் இருக்கும். ஆனால் அவர்கள் சொல்லியிருப்பது தமிழரசுக்கட்சி சின்னத்தில் என்று.
மக்களின் மனநிலை
இது பழையபடி தமிழரசுக் கட்சி தான் முடிவெடுக்கப்போகின்றது என்ற அடிப்படையிலும், ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே. நீங்கள் சேருங்கள். உங்களுக்கு நாங்கள் பார்த்து தருவோம் என்றவாறான ஒரு நிலைப்பாட்டிலேயே கூறியிருக்கிறார்கள். அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போக முடியாது.
அனைவரும் சம பங்காளிகளாக ஒரு கூட்டமைப்பாக இணைந்தால் அதில் சேர முடியும். அதற்கான நேரகாலம் இருக்கிறதோ தெரியாது. அவர்கள் மூன்று நாட்களையே அவகாசமாக கொடுத்துள்ளனர். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு சங்கு சின்னத்தை எடுப்பதற்கான ஒரு அபிப்பிராயம் இருந்தது.
அதற்கான முயற்சியினை செய்வதாக தீர்மானித்திருக்கின்றோம். அதனை செய்வோம். அத்துடன் இளைஞர்களையும் நிச்சயமாக உள்ளே கொண்டு வரவேண்டும். அதேபோல அனுபவம் உள்ளவர்களும் இருக்க வேண்டும்.

இருந்தாலும் அப்படி ஒரு கருத்தாக்கம் மக்கள் மத்தியில் இல்லை. தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதற்காக சிலர் உருவாக்கும் ஒரு கருத்தே இது. இது கட்சிகளை பலவீனப்படுத்துகின்ற ஒரு விடயம்.
நாங்கள் கடந்த முறையும் இளைஞர்களை நிறுத்தியிருந்தோம். இப்போதும் நிச்சயமாக இளைஞர்கள் கேட்பார்கள். தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பது பிரதிநித்துவத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதற்காகவே ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பார்க்கின்றோம். சிலர் சேரமுடியாத நிலை இருக்கிறது. குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவும் நாங்களும் சேருவது கஸ்ரமான விடயம்.
அரசுடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தால் அரசாங்கம் சொல்வதையே சொல்ல வேண்டிய சங்கடம் இருக்கிறது. எமது சார்பாக கதைக்க முடியாது. மௌனியாகவே இருக்க வேண்டும். அபிவிருத்தி பணிகள் செய்யலாம். ஆனால் 1956 இற்கு பின்னர் நியாயமான ஒரு தீர்வினை நோக்கியே தமிழ்மக்கள் வாக்களித்து வருகின்றனர்” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam